திருவள்ளுர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த சம்பவத்தில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்தது.
இந்த வாயு கசிவால் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கம் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமோனியா வாயு கசிந்ததால் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆலையின் உரிமையாளர் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
















