ஆந்திர மாநிலம் கர்னூலில் 405 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தங்கச் சுரங்கத் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
இந்த பிரம்மாண்டமான திட்டத்தை ஜியோ மைசூர் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தபடவுள்ளன.
முதற்கட்டமாக 600 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தச் சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதனை 1,500 ஏக்கராக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக 405 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் ஆண்டிலேயே 400 கிலோ கிராம் தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கச் சுரங்கத் திட்டத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கத் திட்டம் அமைந்துள்ள ஜொன்னகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படவும், சமூகப் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் இது ஒரு முக்கியக் காரணியாக அமையும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
















