கோவை மாவட்டத்தில் ஆவின் மாதாந்திர பால் அட்டைக்கான 2 ரூபாய் தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆவின் பால் விநியோகத்தை நவீனப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய புதிய மொபைல் செயலி மூலம் பால் ஆர்டர் மற்றும் கட்டண முறையை ஜூலை 1 முதல் ஆவின் நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது.
முகவர்கள் தங்களது தேவையை எளிதாக பதிவு செய்து, இருப்பிடத்திலிருந்தே ஆன்லைனில் பணம் செலுத்தும் வகையில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த செயலி வழியாகவே ஜூலை 1 முதல் அனைத்து முகவர்களும் தினசரி பால் மற்றும் பால் பொருட்களுக்கான தேவைப்பட்டியலை பதிவு செய்து, அதற்கான தொகையை செலுத்தலாம்.
மேலும், மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு 2 ரூபாய் தள்ளுபடி ஜூலை 1 முதல் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையிலேயே பால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முகவர்களின் பால் தேவைப் பட்டியல் இனி பாக்கெட் கணக்கில் இல்லாமல், 12 லிட்டர் கொண்ட ஒரு பெட்டி என்ற அடிப்படையில் பதிவு செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
















