இந்தியாவின் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே ‘மைட்டி டிராகன்’ (Mighty Dragon) எனப்படும் தனது J-20 ஸ்டெல்த் போர் விமானங்களை அதிக அளவில் சீனா நிலைநிறுத்தியுள்ளது. ஜூன் மாத இறுதி மற்றும் ஜூலை மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்ட வான்டர்’ (Vantor) நிறுவனத்தின் செயற்கைக்கோள் படங்கள் உறுதிப் படுத்தியுள்ளன. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து ஒரு செய்தி தொகுப்பு.
“மைட்டி டிராகன்” என்று அழைக்கப்படும் செங்டு J-20 என்பது சீனாவின் முதல் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். முதன்மையாக வான் மேலாதிக்கம், நீண்ட தூர இடைமறிப்பு மற்றும் ஆழ்கடல் தாக்குதல் ஆகிய போர் நடவடிக்கைகளுக்காக இந்த ஸ்டெல்த் போர் விமானத்தை செங்டு விமானத் தொழில் குழுமம் உருவாக்கியுள்ளது.
2011-ல் முதல் முறையாக வானில் பறந்த இந்த போர் விமானம் பிறகு 2017-ல் சீன ராணுவத்தில் இணைக்கப்பட்டது. அமெரிக்காவின் F-22 ராப்டர் மற்றும் F-35 லைட்னிங் II போன்ற மேம்பட்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கு இணையாக சீனாவின் J-20 போர் விமானத்தை உருவாக்கி, ஸ்டெல்த் தொழில்நுட்பத்திலும் தனது ஆதிக்கத்தைச் சீனா விரிவுப்படுத்தியுள்ளது.
மறைந்திருந்து தாக்கும் தொழில்நுட்பம், மேம்பட்ட உணர்விகள் மற்றும் நீண்ட தூர வான்-வான் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நீண்ட தூரத்திலிருந்து எதிரிகளைத் தாக்கும் திறன் கொண்ட இந்த J-20 போர் விமானம், பெரிய உள் எரிபொருள் கொள்ளளவு காரணமாக பரந்த மற்றும் நீண்ட தூர ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த J-20 விமானம் வான்வழி முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் தரைவழி கட்டளை அமைப்புகளுடன் உளவு கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்பத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் என்று கூறப்படுகிறது
2019-ல் சுமார் ஐம்பது J-20 போர் விமானங்களைக் கொண்டிருந்த சீனாவிடம் தற்போது சுமார் 500 போர் விமானங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. மேலும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் கூடுதலாக 500 J-20 போர் விமானங்களைச் சீனா செயல்பாட்டுக்குக் கொண்டுவரக் கூடும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
“முதலில் பார்த்தவுடன் முதலில் தாக்கும்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களையே இந்திய எல்லையில் சீனா நிலை நிறுத்தியுள்ளது.
லடாக்கில் உள்ள இந்திய விமானப்படையின் தௌலத் பெக் ஓல்டி (Daulat Beg Oldie) விமான நிலையத்திலிருந்து வெறும் 245 கிலோமீட்டர் தொலைவில் சீனாவின் சின்ஜியாங்கில் உள்ள ஹோட்டான் விமானத் தளத்தில் ஏழு J-20 விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக அருணாச்சல பிரதேசத்தின் தவாங் (Tawang) பகுதியிலிருந்து சுமார் 344 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திபெத்தின் லாசா பகுதியில் உள்ள டாம்சுங் (Damxung) விமானத் தளத்தில் நான்கு J-20 விமானங்களைச்
சீனா நிறுத்தியுள்ளது.
மொத்தம் 11 J-20 விமானங்களை இந்திய எல்லைக்கு அருகே சீனா நிறுத்திவைப்பது இதுவே முதல்முறையாகும். இதுவரை பொதுவெளியில் பதிவான மிகப்பெரிய விமான குவிப்பாகக் கருதப்படுகிறது.
36 ரஃபேல் மற்றும் 260-க்கும் மேற்பட்ட Su-30MKI விமானங்களை வைத்துள்ள இந்தியாவிடம் இன்னும் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் இல்லாததால், சீனாவின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது இந்தியாவின் உள்நாட்டுப் போர் விமானத் திட்டங்களை விரிவு படுத்துவதற்கான அவசரத்தையும் அவசியத்தையும் விரைவுபடுத்த வேண்டிய தேவையையும் சுட்டிக் காட்டுவதாக பாதுகாப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
















