ஆந்திர மாநிலத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் போகபுரம் பகுதியில், 5 ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் 223 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், 17 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த விமான நிலையத்தின் வணிக ரீதியான சேவைகள் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.
மாநில பிரிவினைக்குப் பின், அமைக்கப்பட்டுள்ள அல்லூரி சீதா ராமராஜூ விமான நிலையம், இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளை கையாளும் வகையிலும், ஏர்பஸ் மற்றும் போயிங் போன்ற மிகப்பெரிய விமானங்கள் கூட எளிதாக தரையிறங்கும் வகையிலும் பசுமைவெளி தரத்துடன் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
















