புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதுச்சேரிக்கு வருகை தந்த அமித்ஷா, காலை காவல்துறைக்கு வழங்கப்பட்ட வண்ணக் கொடி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று விருதை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து, புதுச்சேரி தனியார் விடுதியில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜி.என்.எஸ். ராஜசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் பாஜக சார்பில் பிரமாண்ட மூவர்ணக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
புதுச்சேரி முருகா தியேட்டர் சந்திப்பில் நடைபெற்ற தொடக்க விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைகளில் தேசியக் கொடியை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.
மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் நாட்டின் தலைவர்களின் புகைப்படங்களை ஏந்தியபடி, புதுச்சேரியின் முக்கிய வீதிகளில் இந்த பேரணி நடைபெற்றது.
















