தேசிய கொடியை ஏந்தும் போது கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரே உணர்வும் ஒரே சிந்தனையும் வரவேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை தி நகரில் பாஜக சார்பில் மாபெரும் மூவர்ண கொடி யாத்திரை நடைபெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு “வீடு தோறும் மூவர்ணம்” எனும் நோக்கத்துடன் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பங்கேற்று பேரணியை வழிநடத்தினார்.
சென்னை தி நகர் தியாகராயர் சாலையில் இருந்து, பாஜக தலைமையகமான கமலாலயம் வரை தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமான முழக்கங்களுடன் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மூவர்ண கொடியை ஏந்தி பேரணியாக நடந்து சென்றனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் விபி துரைசாமி மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் இந்த யாத்திரையில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தேசிய கொடி ஏந்தும் போது ஒரே உணர்வு தேவை என்றார்.
பாஜக மட்டுமல்ல அனைவருக்கும் நம் தேசம் நம் நாடு என்ற உணர்வு வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாம் அனைவரும் தேசப்பற்றோடு இருக்க வேண்டும் என்றும், “உலகம் முழுவதும் நமது நாட்டின் பெருமையைக் காத்தவர் பிரதமர் மோடி என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
















