ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளதாக குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை அரும்பாக்கம் தனியார் கல்லூரியில் ‘வீரத்துறவி இராம கோபாலன் எண்ணங்களும் எழுத்துகளும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட இந்நூலை குடியரசுத் துணை தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், ஆளுநர் அர்லேகர், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
நூலை வெளியிட்டபின் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளதாக புகழாரம் சூட்டினார். மேலும், தீண்டாமைக்கு எதிராக வலிமையாக அவர் போராடியதாகவும் தெரிவித்தார்.
ஒவ்வொருவரின் மனதிலும், ‘என்று காண்போம் எங்கள் சிந்துவை’ என, உணர்வை ஊட்டி வந்தார் என்றும், நாளொன்று வரும்; முழு சிந்துவும் நமதாகும் என்றும் சிபிஆர் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய இந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன், ராமகோபாலனுடன் 40 ஆண்டுகள் பயணித்த சிபிஆர்-தான் புத்தகத்தை வெளியிட தகுதியானவர் என்று தெரிவித்தார். மேலும், இந்த புத்தக்கம் 6 ஆயிரம் பக்கங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய தஞ்சை ராமகிருஷ்ணா மடத் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர், சுவாமி விவேகானந்தர் வழியை பின்பற்றி நடந்தவர் ராமகோபாலன் என தெரிவித்தார். மேலும், வீரமும் தெய்வமும் வேண்டும் என எழுத்துக்கள் மூலம் சுட்டிக் காட்டியவர் எனவும் கூறினார்.
















