இந்தியா-சீனா இடையிலான உறவுகள் நெருக்கமானால் உலக பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று பிரபல பொருளாதார நிபுணர் லார்ட் ஜிம் ஓ’நீல் தெரிவித்துள்ளார். பிரிக்” (Bric) கூட்டமைப்பு உருவானதில் முக்கிய பங்காற்றிய லார்ட் ஜிம் ஓ’நீல், உலக அளவில் இந்தியா நிமிர்ந்து நிற்பதாகவும் கூறியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த அமைப்புக்கு முதல் அடியை எடுத்து வைத்த பொருளாதார நிபுணர் லார்ட் ஜிம் ஓ’நீல், எதிர்பார்த்ததை விட இந்தியாவும் சீனாவும் அதிகப்படியான வளர்ச்சியைக் கண்டுள்ளன என்று கூறியுள்ளார். எதிர்பாராத விதமாக ரஷ்யாவும், பிரேசிலும் வாய்ப்புகளைத் தவற விட்ட நாடுகளாகவே உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற அனைத்து பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் மொத்த பொருளாதார அளவை விட, சீனாவின் பொருளாதார அளவு இருமடங்காக உள்ளது என்றும், இந்தியாவின் தொடர்ச்சியான வலிமையான பொருளாதார வளர்ச்சி பிரிக்ஸ் கூட்டமைப்புக்குள் இந்தியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்படுவதற்கான உண்மையான மற்றும் ஆழமான விருப்பத்தை வளர்த்துக்கொண்டால், அது ‘பிரிக்ஸ்’ அமைப்பையே மாற்றியமைக்கும் சக்தியாக அமையும் என்று நீல் விவரித்துள்ளார்
தங்களுக்குள் ஒரு தடையற்ற வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்வதும் பிரிக்ஸ்’ நாடுகளுக்குள் ஒரு பொதுவான payment சிஸ்டத்தை உருவாக்குவதும் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் மிக முக்கியமானவை என்று வலியுறுத்தியுள்ளார்.
தொற்றுநோய் மேலாண்மை, உலகளாவிய எரிசக்தித் தேவைகள் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற முக்கியமான உலகளாவிய விவகாரங்களில் இவ்விரு நாடுகளின் பங்கும் முக்கியமானதாக உள்ளதாக கூறியுள்ள நீல், இத்துறைகளில் இந்நாடுகளின் அதிக ஒத்துழைப்பு உலகத்துக்கு நன்மையளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார அளவு விரிவடைவதற்கு ஏற்ப, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் வளர்ச்சி 6 சதவீதமாக இருந்தால் கூட உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் என்று நீல் கூறியுள்ளார்.
மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விஞ்சி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என்று நீல் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் ‘டாலர் ஆதிக்கத்தைக் குறைத்தல் என்பது இனி வெறும் கற்பனை அல்ல, அது யதார்த்தமாகி வருகிறது என்று உறுதிப்படுத்தியுள்ள லார்ட் ஜிம் ஓ’நீல், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்திற்கு ஒரு கூட்டுப் பணப் பரிவர்த்தனை முறை என்பது அந்நாடுகளுக்கு இடையே குறைந்த செலவில் எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் பெரும் வாய்ப்புகள் இருப்பதை அறிந்துள்ள அதிபர் ட்ரம்ப் ‘அரிய வகை கனிமங்கள் விவகாரத்தில், சீனாவுடனான தொடர்பு இல்லாமல் பல விஷயங்களைச் செய்ய முடியாது என்பதையும் உணர்ந்துள்ளார் என்று லார்ட் ஜிம் ஓ’நீல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காலனித்துவ அமைப்பின் ஒரு பகுதியாக இருந்த தங்கள் வரலாற்றுப் பின்னணியின் மனநிலையிலிருந்தும் இன்னும் முழுமையாக விடுபடாத பிரிட்டன் உள்ளிட்ட மற்ற மேற்கத்திய நாடுகள், அமெரிக்காவுக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு ஒருவிதக் குழப்பத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
மேற்கத்திய நாடுகளுக்கும், பிரிக்ஸ் நாடுகளுக்கும் இடையே மிகவும் பயனுள்ள கூட்டாண்மையை வளர்ப்பதே உலகத்தின் இன்றைய தேவை என்று கூறியுள்ள நீல், இந்த நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படாதவரை பெரிய உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
















