சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ந்து, மூன்றாவது முறையாக, நாட்டின் பிரதமராகி, புதிய சரித்திர சாதனை படைத்திருக்கிறார் நரேந்திர மோடி.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பிற கட்சிகளுடன் இணைந்து 293 உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கு பின்னர் தொடர்ச்சியாக மூன்று மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் முதல் காங்கிரஸ் அல்லாத தலைவர் என்ற சாதனையையும் மோடி படைத்திருக்கிறார்.
இந்திய விடுதலையின் போது, நாட்டின் முதல் பிரதமராக, ஜவஹர்லால் நேருவை பதவியேற்க வைத்தது காங்கிரஸ்.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 1964ம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி வரை மாரடைப்பால் இறக்கும் வரை தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக ஆட்சியில் இருந்தார்.
1951ம் ஆண்டு அக்டோபர் முதல் 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தலில் பிரதமரான நேரு, அடுத்து 1957 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும், வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.
1962ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று நேரு மூன்றாவது முறை பிரதமரானார்.
நேரு மீண்டும் மீண்டும் பிரதமராக, இந்தியாவின் முதல் 3 தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்குப் பல காரணங்கள் உள்ளன.
அந்த நேரத்தில், அனைத்து மாநிலங்களிலும் ஒரே தேசிய கட்சியாக காங்கிரஸ் இருந்தது. நீண்ட காலமாக விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் நாடு முழுவதும் காங்கிரசுக்கு நல்ல பெயரும், நேருவுக்கு நல்ல செல்வாக்கும் இருந்தது.
மேலும், காங்கிரஸ் கட்சியே எல்லா மாநிலங்களிலும், பெரிய கட்சியாகவும் இருந்தது. எனவே, எந்த மாநிலத்திலும் நேரு எந்தவித எதிர்ப்பையும் சந்திக்கவில்லை.
பாரம்பரியமான அரசியல் குடும்ப பின்னணி, இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி போன்ற தேசிய தலைவர்களின் ஆதரவு மற்றும் அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு, இவையே ஜவஹர்லால் நேரு தொடர்ந்து 3 முறை பிரதமராக உதவி செய்தது.
நேருவுக்குப் பின் அவரது வாரிசாக வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி,1966ம் ஆண்டு அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்கு பின் முதல்முறையாக பிரதமர் ஆனார்.
தொடர்ந்து 1967, 1971 ஆகிய ஆண்டுகள் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரான இந்திராகாந்தி மீண்டும் 1980ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி இறக்கும் வரை பிரதமராக இருந்தார் இந்திராகாந்தி. ஆனால் அவரும் தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இல்லை.
ஆகவே 60 ஆண்டுகளுக்குப் பிறகு , தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவை தலைமை ஏற்று வழிநடத்த பிரதமர் மோடியை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
2014ம் ஆண்டு முதல்முறையாக வெற்றிபெற்று பிரதமரான பிரதமர் மோடி, 2019ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அபார வெற்றியை பெற்று இரண்டாவது முறையாக பிரதமரானார். இப்போது, 3வது முறையும் பிரதமராகி இருக்கிறார்.
3 முறை நேரு பிரதமர் ஆன போது இந்தியாவில் இருந்த சூழல் வேறு. நேருவுக்கு எதிர்ப்பே இல்லை. ஆனால் மோடிக்கு அப்படி இல்லை.
பலதரப்பப்ட்ட எதிர்ப்புக்கள். மோடி பிரதமராக கூடாது என்ற ரீதியில் தான் 2014 ஆம் ஆண்டிலும், 2019ம் ஆண்டிலும், 2024ம் ஆண்டிலும் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்தன.
ஐந்து ஆண்டுகளில் மக்களின் எண்ணங்களும், விருப்பங்களும்,தேவைகளும் மாறிவிடும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்தியாவைப் பொறுத்தவரை தேர்தல்களில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமானதாகும் .
ஒரு கட்சியின் முகமாக, தொடர்ந்து மூன்று முறை பிரதமராக வெற்றி பெற வேண்டும் என்றால், அந்த தலைவர் மிக உயர்ந்தவராக, மக்களின் நம்பிக்கையைப் பெற்று மக்கள் மனங்களில் நிறைந்து இருக்கவேண்டும். அப்போது தான் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்புக்கு வரமுடியும்.
பல்வேறு தரப்பட்ட, 140 கோடி மக்கள் வாழும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல.
இவற்றையெல்லாம் தாண்டி தான் இந்த சாதனையை பிரதமர் மோடி சாதித்திருக்கிறார்.
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு 16 ஆண்டுகள், 286 நாட்கள் பிரதமராக பதவி வகித்த நிலையில், அவருக்கு அடுத்தபடியாக 15 ஆண்டுகள், 350 நாட்கள் பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தார். 10 ஆண்டுகள், 4 நாட்கள் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தார். 6 ஆண்டுகள், 80 நாட்கள் பிரதமராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்தார். இந்த வரிசையிலும் பிரதமர் மோடி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
2014ம் ஆண்டு முதல் இதுவரை 10 ஆண்டுகள் 19 நாட்கள் பிரதமராக இருந்த பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகி இருப்பதால் அதிக காலம் தொடர்ந்து பிரதமராக இருப்பவர் என்ற புதிய சாதனையையும் படைத்திருக்கிறார் பிரதமர் மோடி.
சத்தமில்லாமல் இன்னொரு சாதனையும் செய்திருக்கிறார் பிரதமர் மோடி. 2001ம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து, தொடர்ந்து 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராக பதவி வகித்த அவர், 2014ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றார். இப்போது மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்கிறார்.
இந்திய அரசியல் வரலாற்றில் மட்டுமில்லை, உலக அரசியல் வரலாற்றிலும், தொடர்ந்து ஒருவரே 23 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டின் உயர் பதவிகளில் இருந்ததில்லை.
இது மட்டுமில்லை, ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர், இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 3வது முறை வந்ததேயில்லை. இதிலும் பிரதமர் மோடி புதிய சாதனையே படைத்திருக்கிறார் என்ற சொல்ல வேண்டும்.
சுதந்திர இந்தியாவில், ஒரு குக்கிராமத்தில் , சராசரி இந்திய குடும்பத்தில் பிறந்து , சிறு வயதிலேயே டீக் கடையில் வேலை செய்த, பிரதமர் மோடி , மூன்றாவது முறையாக, இந்தியாவின் பிரதமராக உயர்ந்திருப்பது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை என்று உலகம் பாராட்டுகிறது.