2050ம் ஆண்டுக்குள் நிலவில் விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா, அடுத்த ஆண்டிலிருந்து செயற்படுத்த இருக்கும் விரிவான மேம்பாட்டுத் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1969ம் ஆண்டு தொடங்கி 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் 10 அமெரிக்கர்கள் சந்திரனில் தரையிறங்கியுள்ளனர். அதன்பிறகு, மனிதர்களைச் சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா நிறுத்தி வைத்தது.
அரை நூற்றாண்டுக்கும் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை, அமெரிக்கா மட்டுமின்றி, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் நிலவு பயணத் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியிருக்கின்றன.
2035-ஆம் ஆண்டுக்குள் நிலவில் விண்வெளி நிலையத்தை அமைக்கவும், 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று செயல்பட்டு வருகிறது.
சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை, நீண்டகால விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாக சந்திர விண்வெளி நிலையத்தை உருவாக்கவும் மற்றும் கிரகங்களில் மனிதன் வாழக் கூடிய சாத்தியக்கூறுகளை ஆராயவும் தனது லட்சியத் திட்டங்களாக சீனா அறிவித்துள்ளது.
அதன்படி, சீனாவின் சந்திர விண்வெளி நிலையம், 2028 மற்றும் 2035 ஆண்டுக்குள் பகுதி பகுதியாக கட்டி முடிக்கப்படும் என்று தெரிய வருகிறது. 2035 ஆம் ஆண்டுக்குள், முதல் கட்டமாக அடிப்படை ஆராய்ச்சி வசதி நிறுவப்படும் என்றும்,இரண்டாம் கட்டம், 2045 இல் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
நிலவில் விண்வெளி நிலையம், எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கு ஒரு தளமாக செயல்படும் என்றும், சந்திரன் மட்டுமின்றி, சூரிய மண்டலத்தின் மற்ற கிரகங்களையும் ஆராய பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திர விண்வெளி நிலையம், எதிர்காலத்தில் இன்னும் மேம்பட்ட விண்வெளி முயற்சிகளுக்கான தயாரிப்புகளும், சோதனைகளும் நடத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், சீனாவின் இந்த திட்டம் பிரபஞ்சம் மற்றும் சூரிய குடும்பத்தின் தோற்றத்தைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிய வருகிறது.
2050ம் ஆண்டுக்குள் விண்வெளி அறிவியலில், முதன்மை நாடாக திகழும் நோக்கத்தில் சீனா இந்த திட்டத்தில் இறங்கியுள்ளது.
உலகத்தில், நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக மட்டும் அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகவே.
தற்போது, நிலவில் மனிதர்கள் தங்குவதற்கான முயற்சியாகவே, சீனாவின் நிலா பயணத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தையும் சீனா உருவாக்கி வருகின்றது.
21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் கோலோச்சக் கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று அந்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.