ஆப்கானிஸ்தான் மீதான நேரடிப் போர் பிரகடனத்தைப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களை ஒரு குற்றச் செயல் என்று கூறிய தலிபான்கள், பாகிஸ்தானுக்குத் தகுந்த நேரத்தில் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இருநாடுகளுக்கும் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் கட்டமைப்பான இராணுவத்தை உடைய அணுசக்தி நாடான பாகிஸ்தானை ஆப்கானை எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த அக்டோபரில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். என்றாலும் ஆப்கான் தலிபான்களிடம் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் சரணடைந்ததைத் தொடர்ந்து தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டது. பின்னர் கத்தார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஆப்கான் தலிபான்களும் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் பதில் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
இருதரப்பிலும் வீரர்களும் கொல்லப்பட்ட நிலையில் இருநாடுகளுக்கும் இடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளது.
நேரடிப் போர் என்று அறிவித்துள்ள பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானால் எதிர்கொள்ள முடியுமா ? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
145 நாடுகளின் உலக இராணுவ தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் 14வது இடத்தில் உள்ளது என்றால் ஆப்கானிஸ்தான் 121வது இடத்தில் உள்ளது.
ஏற்கெனவே, 20 ஆண்டுகளாக அமெரிக்காவும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அன்றைய சோவியத் யூனியனும் எதிர்கொள்ள முடியாமல் ஆப்கான் மண்ணை விட்டு வெளியேறின.
சொல்லப்போனால் ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவத்திடமிருந்த சுமார் 16 லட்சம் இலகுரக மற்றும் கனரக ஆயுதங்கள் மற்றும் பல்வேறு ராணுவ உபகரணங்கள் தாலிபான்கள் வசம் உள்ளன
சோவியத் யூனியன் விட்டுச் சென்ற ZT-23-2 போன்ற ஆயுதங்களும் ஆப்கானிஸ்தானிடம் உள்ளன.
அமெரிக்கா படைகள் வெளியேறும் போது விட்டுச் சென்ற ஏகே-47, எம்-16, எம்-4 மற்றும் எம்-29 போன்ற இலகுரக இயந்திர துப்பாக்கிகளும் பிகா எம்-2 Pika M -2,M -240 போன்ற நவீன துப்பாக்கிகளும், கையெறி குண்டுகள், ஆர்பிஜி-7 மற்றும் ஏடி-4 போன்ற ஏவுகணைகளும், ஏடி-4 மற்றும் பல பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் தாலிபான்களிடம் உள்ளன.
கனரக ஆயுதங்களுள் சுமார் 200 டி-30 என அழைக்கப்படும் 122 எம்எம் ஹோவிட்சர்கள்,155 எம்எம் ஹோவிட்சர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்ட ஹோவிட்சர்கள் தாலிபான்களிடம் உள்ளன.
மேலும், சட்டவிரோத சந்தைகளிலிருந்து வாங்கிய பல நவீன புதிய ஆயுதங்களையும் தாலிபான்கள் வைத்துள்ளனர்.
2024-ஆம் ஆண்டில் பக்ரம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் தாலிபான் அரசு நடத்திய ராணுவ அணிவகுப்பில், ஸ்கட் (Scud) ஏவுகணை ஆர்-17 மற்றும் 300 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக் கூடிய எல்ப்ரோஸ் (Elbros) ஆர்-300 போன்ற ஆயுதங்கள் இடம்பெற்றன. மேலும் ஃப்ராக்-7 என்ற லூனா (Luna) ஏவுகணை, கிராட் ராக்கெட் ஏவுகணை, மிலன் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை மற்றும் ஆர்கன் ஏவுகணைகளையும் தலிபான் அரசு காட்சிப் படுத்தியிருந்தது.
C-208 விமானங்கள், MD-530 ஹெலிகாப்டர்கள், பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்கள், A-29 விமானங்கள், Mi-17 போக்குவரத்து ஹெலிகாப்டர்கள், Mi-24 போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் MD-500 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தலிபான்களிடம் உள்ளன.மேலும், சுமார் 60 போர்க் கப்பல்களும் தலிபான்களிடம் உள்ளன.
இத்தனை ஆயுதங்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தும் திறன் தாலிபான்களுக்கு இல்லையென்பதால் ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் திறன் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் ராணுவப் படைகளில் 6.6 லட்சம் வீரர்கள் உள்ளனர். அதில் 5.6 லட்சம் பேர் பேர் ராணுவத்திலும், 70,000 பேர் விமானப்படையிலும், 30,000 பேர் கடற்படையிலும் உள்ளனர்.
மிகச் சிறிய இராணுவமான ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் மொத்தமே 1.72 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர்,
பாகிஸ்தானில் 6,000க்கும் மேற்பட்ட கவச வாகனங்களும் 4,600க்கும் மேற்பட்ட பீரங்கி வாகனங்களும் உள்ளன. பாகிஸ்தானின் விமானப்படையில் 465 போர் விமானங்களும், 260க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் உள்ளன.எல்லாவற்றிக்கும் மேலாக அணுசக்தி நாடான பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன.
கொரில்லா போரில் தேர்ச்சியும் இரண்டு வல்லரசுகளை ஓடவிட்ட திறமையும் கொண்டுள்ள ஆப்கான் தாலிபான்களுக்கு எதிரான நேரடிப் போர் என்பது பாகிஸ்தானுக்குத் தான் பெரும் பாதிப்பாக இருக்கும் என்று சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
















