ஈரான்-அமெரிக்கா இடையே ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர நடவடிக்கையாக 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு இடையிலான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்” என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்ட இந்த ஆவணத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி 110 நாட்களுக்குப் பிறகு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும் என்று அறிவிக்கப்பட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே பிரான்ஸில் நடந்த ஜி 7 உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் கொடுத்த இரவு விருந்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எலக்ட்ரானிக் முறையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நேரத்தில் ஈரான் அதிபர் பெஷாக்கிடும் கையெழுத்திட்டார்.
நீடித்த அமைதிக்கு வழிவகுப்பதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும், மக்களுக்காக சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையான இந்த ஒப்பந்தம் விரைவில் எரிசக்தி விலை குறைக்க உதவும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
கையெழுத்தான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செயல்பாட்டைச் சோதித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம், தடைகளை படிப்படியாகத் தளர்த்துவதற்கான ஒரு செயல்திட்டத்தையும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பதையும், ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியை அனுமதிக்கும் கருவூல விலக்குகளையும் கொண்டுள்ளது. உடனடியாக நடைமுறைக்கு வந்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அடுத்த 60 நாட்களுக்குள் ஒரு விரிவான தீர்வை எட்டுவதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
வர்த்தகக் கப்பல்கள் எவ்விதக் கட்டணமுமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஹார்முஸ் ஜலசந்தியைத் உடனடியாகத் திறக்கவும், அணு ஆயுதம் தயாரிப்பதற்கேற்ற தரத்தில் ஈரான் சேமித்து வைத்துள்ள யுரேனியத்தை அழிப்பதற்கு ஈரானை ஒப்புக்கொள்ள வைக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை உருவாக்கவோ கையகப்படுத்தவோ மாட்டோம் என்ற தனது உறுதிப்பாட்டை ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகவும் அதன் படி சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) மேற்பார்வையின் கீழ் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்புகள் மேலாண்மை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான 30 நாட்களுக்குள் ஈரான் எல்லைப் பகுதிகளிலிருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்பப் பெறுவதற்கும், ஈரான் மீதான பொருளாதார தடைகள் உட்பட அந்நாட்டு எண்ணெய் ஏற்றுமதிக்கான தடைகளைப் படிப்படியாகத் தளர்த்துவதற்கும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.
குறிப்பாக, 300 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறையாத மதிப்புள்ள பொருளாதார மேம்பாட்டுத் நிதி வழங்கும் திட்டமும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
DEATH TO AMERICA என்று ஓயாமல் முழங்கி வந்த ஈரான், அதே அமெரிக்காவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது நீண்ட கால தீர்வுக்கான தீர்க்கமான ராஜ தந்திர முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.















