ஈரானின் உச்சத் தலைவராக பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றாத நிலையில், முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் பேரன் அலி கமேனியை அடுத்த உச்ச தலைவராக முன்மொழிய அந்நாட்டு மதகுருமார்கள் தயாராகி வருகின்றனர். ஈரானின் அதிகார மையத்தில் என்ன நடக்கிறது? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…
அணு ஆயுத திட்டங்களை ஈரான் கைவிட அறிவுறுத்தி, அந்நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதலைத் தொடர்ந்தன. இந்தத் தாக்குதலில் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கமேனி, அந்நாட்டின் புதிய உச்சத் தலைவராக பொறுப்பேற்றார்.
ஆனால் பதவியேற்ற பிறகு, அவர் ஒருமுறைகூட பொதுமக்கள் முன்பு தோன்றவில்லை. தந்தையின் இறுதிச் சடங்கில் மற்ற 3 மகன்களும் பங்கேற்ற நிலையில், மொஜ்தபா கமேனி பங்கேற்காதது, ஈரான் மக்களிடையே மட்டுமல்ல, உலக நாடுகளிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மொஜ்தபா கமேனியின் முகம் சிதைந்து, உருவமே மாறியதாக கூறப்படும் நிலையில், அதனால்தான் அவர் பொதுவெளியில் வர தயங்குவதாக ஒருசாரார் கூறுகின்றனர். ஆனால், பாதுகாப்பு பிரச்னை காரணமாக அவர் ரகசிய இடத்தை விட்டு வெளிவர மறுப்பதாக மற்றொரு பிரிவினர் கூறுகின்றனர்.
இருப்பினும், மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாததற்கு
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமா? உடல்நலப் பிரச்சினையா? அல்லது திரைமறைவில் இருந்து காய்களை நகரத்துகிறாரா? என்ற விவாதம் சர்வதேச அளவில் நடைபெற்று கொண்டுதான் வருகின்றன.
இந்தச் சூழலில், ஈரானின் புரட்சிகர காவல் படையை நிறுவியவருமான அயதுல்லா அலி கமேனியின் பேரன் அலி கமேனி மீது மதகுருமார்களின் கவனம் திரும்பியிருக்கிறது.
மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாததால், மத அடையாளத்திலும், புரட்சிகர தலைவரின் வாரிசு என்ற அரசியல் அடையாளத்திலும் அலி கமேனியை அடுத்த உச்ச தலைவராக முன்னிறுத்த மதகுருமார்கள் தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இது அதிகார மாற்றமா? அல்லது தற்போதைய ஆட்சிக்கு கூடுதல் ஆதரவை உருவாக்கும் அரசியல் நகர்வா? என்பது இன்னும் தெளிவாக தெரியவரவில்லை.
அமெரிக்கா உடன் ஈரான் மீண்டும் ஒரு போரில் ஈடுபட்டுள்ள இந்தத் தருணத்தில், அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவு பிறப்பிக்கக் கூடிய தலைமை மதகுரு கிட்டத்தட்ட செயல்படாத நிலையில் தான் இருக்கிறார். இதனால், அந்தப் பொறுப்பில் அயதுல்லா அலி கமேனியின் பேரன் அலி கமேனியை உடனடியாக நியமித்து, வெற்றிடத்தை நிரப்ப மதகுருமார்கள் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பின்புலத்தில் மிகப்பெரிய காரணமும் இருக்கிறது. ஈரானில் அதிபரை விட உச்சத் தலைவருக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது. ராணுவம், நீதித்துறை, வெளியுறவுக் கொள்கை, அணு ஆயுதத் திட்டம் என முக்கிய முடிவுகள் அனைத்திலும் உச்சத் தலைவரின் பங்கு அளப்பரியது.
அதனால்தான், உச்சத் தலைவர் பொதுவெளியில் தோன்றாத நிலையில், அவருக்கு பதிலாக ஈரானில் புதிய அதிகார மையம் உருவாகிறதா? என்ற கேள்வி சர்வேச அளவில் எழுந்திருக்கிறது.
ஒருபுறம் ஈரானில் அமெரிக்கா நிகழ்த்திய போரின் காயங்கள் இன்னமும் ஆறாத ரணமாக தொடர்கிறது. மறுபுறம், ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், அந்நாட்டின் அதிகார மையத்தில் நிகழும் ஒவ்வொரு மாற்றமும் ஈரானின் எதிர்காலத்தை மட்டுமல்ல, மத்திய கிழக்கின் அரசியல் போக்கையும் தீர்மானிக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது…
















