பொது மக்களிடையே பெரும் வரவேற்பை கையடக்க விசிறிகளால் சுற்றுச்சூழலுக்குப் பெரும் ஆபத்தாக மாறும் என்று உலகளாவிய சுற்றுச் சூழல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். அது எப்படி சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மிகச் சிறியதாக இருப்பதால் மட்டுமல்ல அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் கையடக்க சிறிய மின்விசிறிகள் உலகமெங்கும் பிரபலமாகி உள்ளன.
குறிப்பாக காலையில் சமையலறையில், மதியம் மேஜையில், மாலையில் படுக்கையறையில் என ஒவ்வொரு இடத்துக்கும் பல மின்விசிறிகள் தேவையில்லாமல் அமர்ந்திருக்கும் இடத்தைப் பொறுத்து இந்த கையடக்க மின்விசிறியை மாற்றிக்கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பம்சமாகும். மேலும் பெரிய ஏசி அல்லது மின்விசிறிகளை விட மிகக் குறைந்த அளவு மின்சாரத்தையே இந்த மின்விசிறிகள் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
இதனாலேயே பல வீடுகளில் ஒவ்வொரு முறையும் AC யைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நீண்ட நேரம் மின்விசிறியைப் பயன்படுத்துவதையே விரும்புகின்ற சூழலில் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த கையடக்க மின்விசிறிகளே பலரின் விருப்பத் தேர்வாக உள்ளன. சொல்லப்போனால் பேருந்திலோ, பூங்காவிலோ அல்லது ரயிலுக்காகக் காத்திருக்கும்போதோ மக்கள் இந்த விசிறியைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
பெரும்பாலும் ஆன்லைனில் மட்டுமே விற்கப்பட்டு வந்த இந்த கையடக்க மின் விசிறிகள் தற்போது பெரிய பெரிய சூப்பர்மார்க்கெட்டில் பணம் செலுத்தும் இடங்களிலும் தள்ளுபடி விலையில் விற்கும் சிறு சிறு கடைகளிலும் அதிக அளவில் விற்கப் படுகின்றன.
பொதுவாக குறைந்த விலையில் கிடைக்கும் இந்தமாதிரியான மின்சாதனங்கள், விரைவாக வாங்கப்பட்டு, சிறிது காலம் பயன்படுத்தப்பட்டு, பின்னர் தூக்கி எறியப்படும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக சார்ஜிங் கேபிள்கள் தொடங்கி இந்த கையடக்க விசிறிகள் வரை சொல்ல முடியும்.
200 கிராம் எடையுள்ள இந்தச் சாதனத்தில் தாமிரக் கம்பிகள், அரிய வகை காந்தங்கள் (rare-earth magnets) மற்றும் மீண்டும் மின்னேற்றம் செய்யக்கூடிய லித்தியம்-அயன் பேட்டரிகள் உள்ளன. இந்தப் பொருட்களே சுற்றுச்சூழளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொரு விசிறியிலும் இந்தப் பொருட்கள் குறைந்த அளவிலேயே இருந்தாலும், மின்னணுக் கழிவு என்பது ஒரு வளர்ந்து வரும் பிரச்சினையாகவே உள்ளது.
எளிதில் பழுதாகும் கையடக்க விசிறிகள் குப்பைகளில் வீசப்படுவதால் நச்சுக்கழிவுகள் மண்ணில் கலக்கின்றன. இவற்றில் உள்ள லித்தியம் பேட்டரிகள் தயாரிக்கச் செய்யப்படும் கனிமங்களால் நிலத்தடி நீர் மற்றும் வளிமண்டலம் சீரழிகிறது. மலிவான பிளாஸ்டிக்கால் செய்யப்படுவதால் மறுசுழற்சி செய்ய முடியாமல் பல ஆண்டுகள் அழியாமல் தங்குகின்றன.
2026-ல் இங்கிலாந்தில் மட்டும் 80 லட்சத்துக்கும் அதிகமான கையடக்க விசிறிகள் வாங்கப்படும் என்றும் இன்னும் நான்கு ஆண்டுகளில் இந்த விற்பனை 98 லட்சத்தைத் தாண்டும் என்றும் ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அடிக்கடி ஏற்படும் வெப்ப அலைகளால், கையடக்க மின்விசிறிகளின் ஆண்டு விற்பனை 1.14 கோடியைத் தாண்டக்கூடும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
இன்னொரு புறம் 2026-ல் சுமார் 1.8 மில்லியன் கையடக்க மின்விசிறிகள் குப்பையில் வீசப்பட்டுள்ளன என்றும், அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2.6 மில்லியனாக உயரும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது.
கழிவு சேகரிப்பு வாகனங்களால் அல்லது கழிவு சுத்திகரிப்பு வகைப்படுத்தும் மையங்களில் இந்த மின்விசிறிகள் நசுக்கப்படும்போது அவை தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஏற்படும் தீவிபத்துகள் கழிவு மேலாண்மைத் துறை முழுவதும் ஒரு பெரும் பிரச்சனையாக மாறும் என்றும் கூறப்படுகிறது.
நீண்ட காலம் நீடித்து உழைக்கக்கூடிய, மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் பழுதுபார்க்கக்கூடிய பொருட்களை வடிவமைப்பது உற்பத்தியாளரின் பொறுப்பு என ஒரு சுற்றுச்சூழல் கொள்கையை நடைமுறை படுத்த வேண்டிய நேரமிது என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
வசதியானது ,மலிவானது என்பது சாதகமாக இருந்தாலும் மறுபயன்பாடு, பழுதுபார்த்தல் மற்றும் மறுசுழற்சி என்பவை சுற்றுச் சூழலுக்குப் பெரும் சவாலாகவே உள்ளன.
















