இந்தியாவிற்கு எதிரான பிரிவினைவாத எண்ணம் கொண்ட கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணி, புலியைப் பார்த்து நாய் கோடு போட்ட கதை போலத்தான் என பாஜக மாநில தலைவர் கு. அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை ஆளும் திமுக அரசு நிறைவேற்ற வில்லை என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆளும் திமுக அரசைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில், தமிழகமெங்கும், அறப்போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக தமிழக பாஜக சார்பில் சென்னை காரப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த
பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை,
திமுக ஆட்சிக்கு வந்தபின் 26 மாதத்தில் 3 முறை மின்கட்டணம் உயர்ந்துள்ளது.
மணிப்பூர் குறித்து முதலமைச்சர் திடீரென இப்போது எழுந்து பேசுகிறார், அவருக்கு மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது.
தமிழகத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டு 210 நாள்கள் ஆகிறது, அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
மணிப்பூரின் பிரச்சனைகளை மத்திய அரசு முழுவதுமாக சரி செய்யும். மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த அநியாயத்திற்கு எதிராக அம்மாநில அரசு 6 குற்றவாளிகளைக் கைது செய்ததுடன், அவர்களுக்குத் தூக்கு தண்டனையைப் பெற்று தருவோம் என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் ராணுவ வீரர்கள் பெருமளவில் உயிர்சேதம் , பொருள் சேதம் ஏற்படாமல் பாதுகாத்து வருகின்றனர். மணிப்பூர் 2016 க்குப் பிறகுதான் அமைதியை நோக்கி சென்றது. அதற்கு முன்பு அமைதி இல்லாமல்தான் இருந்தது.
ஸ்டாலின் முதலமைச்சர் என்பதை மறந்து முழுநேர அரசியல்வாதியாக இருக்கின்றார் என்பதைத்தான் விளையாட்டு வீரர்களுக்கு எழுதிய கடிதம் காட்டுகின்றது.
குன்னத்தில் பட்டாசு வெடித்த, பட்டியல் சமூகத்தை சேர்ந்த பாஜக பிரமுகரைத் திமுக கிளைச்செயலாளர் காலில் விழந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை ஆரம்பித்த பாஜகவிற்கு, அவர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்பதும் தெரியும்.
தனது மகன் உதயநிதியை முன்னிலைப்படுத்தவே அவ்வப்போது விளையாட்டு, விளையாட்டு என முதலமைச்சர் பேசி வருகிறார். காவிரி நீரை முழுமையாக பெற்றுத்தர உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
தமிழகம் தேச விரோதிகளின் புகலிடமாக மாறி உள்ளது. கடந்த 2 ஆண்டில் என்ஐஏ பல சோதனைகளைத் தமிழகத்தில் நடத்தியுள்ளன. நாள்தோறும் குற்றச்சம்பவம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டு காவல்துறைக்கு சுதந்திரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் குற்றச்சம்பவம் அதிகரித்துள்ளது.
பிரதமர் தமிழகத்தில் போட்டியிட்டால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி,
இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறாரா என்பது குறித்து பாஜக தேசியத் தலைமையிடமிருந்து அதிகாரபூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.ஆனால் தொண்டர்கள், மக்கள் பிரதமர் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா என்று சொல்லும்பொழுது உள்ளத்தில் இந்தியர் என்ற உணர்வு இருக்க வேண்டும்.ஆனால் ‘இந்திய ‘கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக ஒருகாலத்தில் பிரிவினை பேசிய கட்சி, பிரிவினைவாத தடுப்புச் சட்டத்தால் அது பற்றிப் பேசுவதை பின்னர் திமுக நிறுத்தியது. திமுக இந்தியா பற்றி பேசுவது வேடிக்கையானது, விசித்திரமானது , ஆச்சரியமானது. இன்றும் மாநிலங்களிடைய பிளவை ஏற்படுத்துவதில் முதன்மையான கட்சி திமுகதான்.
உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா போன்றவர்கள் காஷ்மீர் இந்தியாவுடன் சேருவதை எதிர்த்தவர்கள். ஜேஎன்யூ-வில் நடைபெற்ற போராட்டத்தில் இந்தியாவிற்கு எதிராக முழக்கமிட்ட கட்சி காங்கிரஸ், புலியை பார்த்து நாய் கோடு போட்ட கதை போலத்தான் அவர்கள் நிலை . தற்போது ‘இந்தியா’ கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
காங்கிரஸ் சில மாநிலங்களில் மட்டும்தான் ஆட்சி செய்கிறது, ஆனால் அந்த கட்சி தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. குடும்ப கட்சிகளை காங்கிரஸ் இணைத்து வைத்துள்ளது. காங்கிரஸை விட அதிகமான மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. தேசிய ஐனநாயக கூட்டணியில் சிறிய, பெரிய கட்சி வேறுபாடு இல்லை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற அனைத்து கட்சிகளும் பாஜகவை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் காங்கிரசை அந்த கூட்டணியில் அவ்வாறு ஏற்றுள்ளார்களா..? நிதிஷ், மம்தா, காங்கிரஸா ? யார் தலைவர் என்றே தெரியவில்லை..? அங்கு யார் பிரதமர் வேட்பாளர் ? தற்போது கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தொண்டர்களைக் குத்திக் கொன்ற கட்சிகள், காங் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெறும் காலத்தில் நான் நடை பயணம் சென்றாலும் செல்போன் மூலமாக பிற கட்சி தலைவர்களுடன் பேச முடியும். முன்பெல்லாம் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர். எனது நடை பயணத்தின் போது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சென்று அந்த தொகுதிக்குப் பிரதமர் நரேந்திர மோடி என்ன நன்மைகள் செய்திருக்கின்றார். அந்த தொகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கின்றார் என்ற விவரத்தை சொல்ல உள்ளேன். நடைபயணம் செல்வதற்கான உரிய காலம் இதுதான்.
பாஜக ஒரு போதும் தேர்தலுக்கான அரசியலில் மட்டும் ஈடுபடாது.
பாஜக வின் வளர்ச்சிக்காகவே நடை பயணம் செல்கின்றேன். நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்ற இலக்கும் எனது நடைபயணத்திற்கு காரணம் என தெரிவித்தார்.