“பிரிக்ஸ்” நாடுகளின் கூட்டமைப்பில், சவூதி அரேபியா, ஐக்கிய அரசு அமீரகம், ஈரான், அர்ஜெண்டினா, எகிப்து ஆகிய 6 நாடுகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
“பிரிக்ஸ்” கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், “பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் சவூதி அரேபியா, ஐக்கிய அரசு அமீரகம், ஈரான், எகிப்து, அர்ஜெண்டினா, எத்தியோப்பியா ஆகிய 6 நாடுகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர் சேர்க்கை 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் நடைபெறும்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 நாடுகளையும் வரவேற்கிறேன். அந்நாடுகளின் தலைவர்களுக்கும், மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட நாடுகளுடன் நெருங்கிய உறவுகளையும், வரலாற்று உறவுகளையும் கொண்டிருக்கும். ஆர்வத்தை வெளிப்படுத்தும் நாடுகளை சேர்ப்பதற்கும், மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் தயாராக இருக்கிறோம்.
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நேற்று நிலவில் மெதுவாக தரை இறங்கியது. சந்திரயான் வெற்றி இந்தியா சார்ந்தது மட்டுமல்ல. இந்த வெற்றிக்குப் பின்னால் உலக நாடுகளின் விஞ்ஞானிகளின் பங்களிப்பும் இருக்கிறது. ஆகவே, இந்திய மக்கள் சார்பிலும், இந்திய விஞ்ஞானிகள் சார்பிலும் உலக விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்றுத் தருணத்திற்கு வாழ்த்துகள்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நடந்த இந்த 3 நாள் சந்திப்பில் பல முடிவுகள் எடுக்கப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பிரிக்ஸ் அமைப்பின் விரிவாகத்துக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. இந்த ஆதரவு இனியும் தொடரும். பிரிக்ஸ் கூட்டமைப்பின் விரிவாக்கம், நவீனமயமாக்கல் ஆகியவை தற்போது முக்கிய தேவையாகும்” என்றார்.