கலாச்சாரப் பாரம்பரியம் என்பது வெறும் கல்லில் போடப்படுவது மட்டுமல்ல, தலைமுறைத் தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் மரபுகள் என்று ஜி20 கலாச்சார உச்சி மாநாட்டில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு, செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, ஜி20 அமைப்பின் பல்வேறு பிரிவுகளின் உச்சி மாநாடு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஜி20 அமைப்பின் கலாச்சார உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலாச்சாரத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதில், காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “எனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் நாங்கள் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். காசி என்பது உலகின் மிகப் பழமையான நகரம் மட்டுமல்ல, புத்தர் தனது முதல் பிரசங்கத்தை வழங்கிய சரநாத், இங்கிருந்து வெகு தொலைவில் இல்லை. இது உண்மையில் இந்தியாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார தலைநகரமாகும். கலாச்சாரம், ஒன்றிணைவதற்கான உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளது. பலதரப்பட்ட பின்னணிகளையும், கண்ணோட்டங்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்தியாவில் உள்ள நாம், நமது நித்திய மற்றும் பன்முக கலாச்சாரத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். நமது அருவமான கலாச்சாரப் பாரம்பரியத்திற்கும் நாங்கள் பெரும் மதிப்பைக் கொடுக்கிறோம்.
கலாச்சாரப் பாரம்பரியம் என்பது வெறும் கல்லில் போடப்படுவது மட்டுமல்ல, தலைமுறைத் தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் மரபுகள். பண்டிகைகளும் கூட தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் மரபுகள்தான். பொருளாதார வளர்ச்சிக்கும், பல்வகைப்படுத்தலுக்கும் பாரம்பரியம் இன்றியமையாத சொத்து என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவில் உள்ள நாங்கள், எங்களின் பல்வேறு கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். நாட்டின் தொலைதூர மூலைகளில் உள்ள கலாச்சார சொத்துக்கள் மற்றும் கலைஞர்களை இந்தியா அங்கீகரிக்கிறது. இந்த உச்சிமாநாடு நாட்டின் வளமான கலாசாரச் சித்திரங்களைப் பாதுகாத்து, காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும்.
நமது கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் பல மையங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். வரவிருக்கும் மாதத்தில், இந்தியா 1.8 பில்லியன் டாலர் ஆரம்ப ஒதுக்கீட்டில் ‘பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தைத் தொடங்கும். இந்த முயற்சி பாரம்பரிய கைவினைஞர்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறினார்.