ஒரே தொடர்ச்சியான சோதனைகளில் மூன்று அதிநவீன ஏவுகணைகளை DRDO வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொண்டு இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2019ம் ஆண்டு விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி வல்லரசு நாடுகளையே வியக்கவைத்தது.
அந்த ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி, ‘மிஷன் சக்தி’ என்ற செயற்கைக்கோள் எதிர்ப்பு (ASAT) ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக இந்தியா நடத்தியது.
சுமார் 300 கிலோமீட்டர் உயரத்தில் புவிச் சுற்றுப்பாதையில் இருந்த ஒரு இலக்கு செயற்கைக்கோளை வெற்றிகரமாகத் தாக்கி DRDO இந்த சாதனையைப் புரிந்தது.
இதன் மூலம், செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணைத் திறன்களை நிரூபித்த அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய விண்வெளி வல்லரசுகளின் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா இணைந்தது.
மிஷன் சக்தியின் வெற்றி DRDO-வின் விண்வெளித் தொழில்நுட்பத் திறனை உறுதிப்படுத்தியதோடு விண்வெளியில் தனது சொத்துக்களை பாதுகாக்கும் தேசத்தின் திறனையும் நிரூபித்தது.
முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப் பட்ட இந்த மிஷன் சக்தி, கூடுதலாக பாலிஸ்டிக் ஏவுகணைப் பாதுகாப்பு திட்டத்துக்கும் ஒரு பெரிய உந்துதலாக அமைந்தது.
தொடர்ந்து 2019ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி மின்காந்த நுண்ணறிவு செயற்கைக்கோளையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனைப் படைத்தது.
இதனைத் தொடர்ந்து ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 5000 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை 400 கிலோமீட்டர் வரையிலான அதிக உயரத்தில் இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள் தயாரிப்பில் DRDO இறங்கியது.
இந்நிலையில் கடந்த ஜூன் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில்,எதிரிகளின் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழிக்கும் மூன்று தொடர் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இந்தச் சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட இடைமறிப்பு ஏவுகணைகள் தங்கள் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கியழித்துள்ளன. இதன் மூலம் 2,000 கிலோமீட்டர் முதல் 5,000 கிலோமீட்டர் வரையிலான இலக்குகளைத் தடுத்து அழிக்கும் ஆற்றலை உறுதி செய்துள்ள இந்தியா பல அடுக்கு ஏவுகணைத் தடுப்புப் பாதுகாப்புத் திறனை நிரூபித்துள்ளது.
இது எதிரி பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடையாளம் காணவும், கண்காணிக்கவும், இடைமறிக்கவும் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட ரேடார்கள், கட்டளை மையங்கள் மற்றும் இடைமறிப்பு ஏவுகணைகளின் ஒருங்கிணைந்த நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது
மேலும் கடற்படைக்கான நடுத்தர தூர கப்பல் அழிப்பு ஏவுகணையின் முதல் சோதனையையும் வெற்றிகரமாக DRDO நடத்தியுள்ளது.
ஒரு கடற்படை தளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, துல்லியமான வழிசெலுத்தல், குறைந்த உயரத்தில் கடல் மட்டத்திற்கு மேல் பறத்தல் மற்றும் கடல்சார் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்குதல் ஆகிய சோதனைகளில் வெற்றிப் பெற்றுள்ளது.
வளர்ந்து வரும் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு சோதனையில் வெற்றியும் பெற்றுள்ளது என்று கூறியுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது எக்ஸ் பக்கத்தில் DRDO விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இச்சோதனைகளை உன்னிப்பாகக் கண்காணித்ததுடன் DRDO மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சியைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும் DRDO-வின் தலைவருமான ராஜேஷ் குமார் சிங் பாராட்டியுள்ளார்.
















