கன்னியாகுமரி எல்லை தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதியான பாறசாலை அருகே உள்ள கொற்றாமம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த ஆட்டோ மற்றும் கேரள அரசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார், ஆட்டோ மற்றும் பேருந்தில் பயணித்த 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
















