பெரியார் கூற்றை உதாரணம் காட்டி தி.மு.க. எம்.பி. அப்துல்லா பேசியதற்கு, பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப் பிரிவை, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது.
இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும். அதேபோல, இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததிலும் தவறு இல்லை. அதேசமயம், 2024 செப்டம்பருக்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.
இத்தீர்ப்பு பா.ஜ.க.வினரால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தொகுதிகளை அதிகரிப்பது, எஸ்.சி., எஸ்.டி. பிரதிநிதித்துவம் உள்ளிட்ட திருத்தங்களுடன் ஜம்மு காஷ்மீர் மறுவரையறை 2019 திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய தி.மு.க. எம்.பி. அப்துல்லா, நமது முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதோடு, ஒவ்வொரு இனமும் தங்களது தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்ள உரிமை உண்டு என்று பெரியார் கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதில், பெரியாரின் கருத்தை ஏற்க முடியாது என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். மேலும், தி.மு.க. எம்.பி. அப்துல்லா பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அப்துல்லா பேச்சை தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தி.மு.க. உறுப்பினர் அப்துல்லாவின் பேச்சு அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டுமா? என்பதை அவைத் தலைவர் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், “370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் என்று வர்ணித்த தி.மு.க. உறுப்பினரின் கருத்தை ஏற்க முடியாது. இனத்தின் அடிப்படையில் தீர்மானிப்பது அரசியலமைப்பின் சாரத்துக்கு எதிரானது.
நாடாளுமன்ற அவையில் கருத்துச் சுதந்திரம் என்னும் உரிமையால் தேசத் துரோகக் கருத்தைக்கூட மேற்கோள் காட்ட முடியுமா என்ன? தி.மு.க. உறுப்பினர் அப்துல்லாவின் கருத்து நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. இதை ஏற்க முடியாது. இந்தக் கருத்து, பேச்சு சுதந்திரத்துக்குத் தகுதியற்றது.
இதுபோன்ற பிரச்சனையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? நாம் அனைவரும் அரசியலமைப்பின் மீது சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறோம். இது பேச்சு சுதந்திரம் அல்ல. ஓர் உறுப்பினரின் இத்தகைய தவறான செயல்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? உறுப்பினர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களால் இதை ஏற்க முடியாது. எனவே, அந்தப் பகுதிகளை நான் நீக்குகிறேன்” என்றார். தொடர்ந்து, பெரியாரின் பெயருடன், தி.மு.க. எம்.பி. அப்துல்லாவின் கருத்துகளும் நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.