இந்தியா முழுவதும் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஷரத்துக்களை அரசியல் சாசனத்தில் அத்தியாயமாக சேர்க்க சட்டக்கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுவதால், மக்களின் வரிப்பணம் வீணாவதோடு, வளர்ச்சி திட்டப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால், மக்களின் வரிப்பணம் சேமிக்கப்படுவதோடு, பல்வேறு வளர்ச்சி பணிகளும் வேகமாக நடக்கும்.
இந்தியாவில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே, இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் சட்ட ஆணையம், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்து வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சட்டக்கமிஷன் ஆலோசனை நடத்தியது. அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளின் கருத்தைக் கேட்டு சட்டகமிஷன் கடிதம் எழுதியது.
இதனையடுத்து, 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அமல்படுத்துவது தொடர்பாக அரசியல் சாசனத்தை திருத்த வேண்டி, ஓய்வு பெற்ற நீதிபதியும் சட்டக்கமிஷன் தலைவருமான ரித்துராஜ் அவஸ்தி ஒரே நாடு ஒரு தேர்தல் ஷரத்துக்களை அரசியல் சாசனத்தில் அத்தியாயமாக சேர்க்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.