இடஒதுக்கீட்டுப் பலன்களுக்காக மட்டுமே மத மாற்றம் செய்வது அரசியல் சாசனத்தின் மீதான மோசடி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் இந்து தந்தை மற்றும் கிறிஸ்தவ தாய்க்கு பிறந்த பெண் ஒருவர், சில மாதங்களிலேயே கிறிஸ்தவராக ஞானஸ்நானம் செய்யப்பட்டார்.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சேரியில் மேல்பிரிவு எழுத்தர் பணிக்காக இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர் என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தபோது, அதனை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்தது.
இதனை எதிர்த்து கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது 3 மாதங்களுக்கும் குறைவான குழந்தையாக இருந்தபோது ஞானஸ்நானம் செய்யப்பட்டது என்ற வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த பதிவை ரத்து செய்ய அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை என தெரிவித்தது.
தேவாலயத்திற்கு தவறாமல் செல்வதன் மூலம் மத விசுவாசத்தை தீவிரமாக கடைப்பிடிப்பதை அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சான்றுகள் தெளிவாக நிரூபிப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக மட்டுமே இந்து மதத்தை தழுவுவதாகக் கூறுவது, இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பை மோசடி செய்வதாகும் எனவும் நீதிபதிகள் கூறினர்.
மேலும், மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டால் இடஒதுக்கீட்டு கொள்கையின் சமூக நெறிமுறைகள் தோற்கடிக்கப்படும் என கூறிய உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
















