மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை அரசே ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் உள்ள 8 ஆயிரத்து 374 ஏக்கர் எஸ்டேட் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக தமிழக அரசு அறிவித்தது.
இதனையடுத்து மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த பி.பி.டி.சி. நிறுவனம் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது.
இதை எதிர்த்து மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை, தமிழக அரசின் டான்டீ தேயிலை தோட்டக் கழகம் நிர்வாகம் ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரணையின் போது, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பாரம்பரிய வனவாசி என்ற வரையறையின் கீழ் இடம் பெறமாட்டார்கள் என்றும், புலம்பெயர்ந்த தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்க முடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் மாஞ்சோலை தோட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அதில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணப் பலன்களை வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மேலும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.