விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளதாகவும், பயணிகள் விமானங்களையும் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் சிறப்பு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இவ்வளவு நீண்ட காலத்திற்கு சேவை செய்யும் வாய்ப்பை தனக்கு வழங்கியதற்காக, நாட்டு மக்களுக்கு தலைவணங்கி நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.
என்.டி.ஏ. அரசின் இந்த 12 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி வலைகளிலிருந்து நாடு விடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும், உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பயனடைந்துள்ளதாகவும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்தியாவின் வலிமையை உலகம் கண்டதாகவும் தெரிவித்தார். செமிகண்டக்டர் துறையில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாகவும், கப்பல் போக்குவரத்துத் துறையில் இந்தியா சுயசார்பு எனும் புதிய இலக்குகளை நோக்கி முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்துத் துறையிலும் இந்தியா தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, பயணிகள் விமானங்களையும் இந்தியா தயாரிக்கும் என்றும், அதில் நமது குடிமக்கள் பயணம் செய்யும் நாள் வெகுதொலைவில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
















