மோட்டார் பம்பு செட்டுகளுக்கு தேவையான மும்முனை மின்சாரம் கிடைக்காததால், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெற்பயிர்கள் காய்ந்து சருகாகும் நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ஆண்டிற்கான குறுவை சாகுபடி பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து இதுவரை நீர் திறந்துவிடப்படாத காரணத்தால், நடவு செய்த நெற்பயிர்களைக் காப்பாற்ற மோட்டார் பம்ப் செட்களையே பெரும்பாலான டெல்டா விவசாயிகள் நம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், தவெக ஆட்சியில் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களால், மும்முனை மின்சாரம் கிடைக்காமல் மோட்டார் பம்ப் செட்கள் எல்லாம் முடங்கிப் போய் கிடப்பது, தழைந்து வரும் நெற்பயிர்களையும், உழைத்துக் களைத்த விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தையும் ஒருசேர பாழாக்கி விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, சாதாரண பொதுமக்கள் முதல் நாட்டின் முக்கியத் தொழில்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்தத் தொடர் மின்வெட்டு பிரச்சனையை, முதல்வர் விஜய் இனியும் அலட்சியமாகக் கையாளக் கூடாது என கூறியுள்ளார்.
“உபகரணங்கள் திருடுபோய்விட்டன, ஊரறிய புகார் கொடுத்துள்ளோம்” என்ற உப்புச்சப்பில்லாத காரணங்களைக் கூறி கடமையைத் தட்டிக் கழிக்காமல், தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு முடுக்கிவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேட்டூர் அணையில் இருந்து இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதுவரை மோட்டார் பம்ப் செட்கள் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்க முன்வர வேண்டும். திமுக அரசைப் போல தவெக அரசும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து விடக் கூடாது என்பதை முதல்வருக்கு கோரிக்கையாகவே முன்வைக்கிறேன் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
















