சென்னை பட்டினப்பாக்கம் அருகே வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்ற கோரிக்கையை திமுக வேட்பாளர் த.வேலு நிறைவேற்றவில்லை எனக்கூறி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட திமுக வேட்பாளர் த.வேலுக்கு எதிராக மீனவர்கள் கருப்புக்கொடி காட்டியும், கருப்பு முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. கடந்த தேர்தலில் மீனவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாமல் மீண்டும் வாக்கு கேட்க வருவது ஏற்றுக்கொள்ள முடியாது என மீனவர்கள் தெரிவித்தனர்.
மீனவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகள் மற்றும் சம்மன்களுக்கு எம்எல்ஏ த.வேலுதான் காரணம் எனவும் குற்றம்சாட்டினர். வீட்டுமனை பட்டா கோரி துணை முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக வேட்பாளரை தேர்தலில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
















