மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் தற்செயலாக நடந்தது அல்ல என்றும், திட்டமிடப்பட்டு குழு மூலமாக இந்த செயலை அரங்கேறியுள்ளதாகவும் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் BPO மையத்தில், பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றப் புகார்கள் தொடர்பாகப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இதுகுறித்து மேற்குவங்க மாநிலம் ராஜர்ஹாட் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது என்றும், இது ஏதோ தற்செயலாக நடந்தது அல்ல எனவும், ஒரு திட்டமிடப்பட்ட குழு மூலமாக இந்தச் செயல்களை அரங்கேறியதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சதிச் செயலின் பின்னணி எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதை அறிய NIA போன்ற மத்திய அமைப்புகளின் உதவியையும் நாடியுள்ளதாக குறிப்பிட்ட பட்னாவிஸ், இந்த விவகாரத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
















