சோளிங்கர் தொகுதியில் ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசிய உரையை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முற்றிலும் தவறாக மொழிபெயர்த்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் வரும் 21-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தமிழகத்தில் தனது முதற்கட்ட தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர் பேசிய உரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மொழிப்பெயர்த்தார்.
அந்த சமயத்தில் ராகுல் காந்தி பேசிய கருத்துக்களை முற்றிலும் மாறுபட்டதாக செல்வப்பெருந்தகை மொழிப்பெயர்த்து கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பாஜக, அதிமுக கூட்டணி குறித்து ராகுல் கூறிய பல்வேறு விமர்சனங்களை, செல்வப்பெருந்தகை வேறு பொருளில் திரித்து கூறியதாவும், பிரதமர் மோடி, டிரம்ப் உறவு குறித்த விமர்சனங்களை நேர்மாறாக எடுத்துக்கூறியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாகியுள்ளது. இந்த சூழலில், செல்வப்பெருந்தகையின் தவறான மொழிப்பெயர்ப்பு ராகுல் காந்தியை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருப்பதாகவும், அக்கட்சி வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
















