இலங்கையில் 10 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற இந்திய அரசின் அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், அந்நாட்டின் பிரதமர் ஹரினி அமரசூரியாவையும், எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாசாவையும் சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து, கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் செயல்படுத்தி வரும் அனைவருக்குமான வளர்ச்சி என்ற கோட்பாட்டை இலங்கை வலுப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
இந்தியா, இலங்கை இடையேயான கூட்டாண்மையின் மூலம் எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சி விண்ணை தொடும் அளவிற்கு இருக்கும் என கூறினார்.
மேலும், இணைவோம், வளர்வோம் என்ற இந்திய அரசின் முழக்கத்தை இலங்கை அரசு செயல்படுத்தி வருவதாக சி.பி.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
















