மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டு கட்டுகளையும், பணம் விநியோகம் செய்வதற்கான ஆவணங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணம் பதுக்கி வைத்துள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து, மந்தைவெளியில் உள்ள த.வேலுவின் நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வீட்டின் சமையல் அறை, படுக்கை அறையில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டு கட்டுகளையும், பணம் விநியோகம் செய்வதற்கான ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சத்தியமூர்த்தியிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















