தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், போலீசார் தாக்கியதாக குற்றம்சாட்டி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக கடந்த 17-ம் தேதி தென்பாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அன்றைய தினமே உடலில் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் தாக்கியதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், தொடர்புடைய 4 போலீசாரை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, உறவினர்களுடன் டவுன் டிஎஸ்பி சுனில் தலைமையிலான போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
















