நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவாதத்தை தடுத்து நிறுத்துவதை நோக்கமாக கொண்டு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளை விதிக்கும் செயல் ஏற்புடையதல்ல என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையின் இன்றைய கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளும், என்டிஏ கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
நீட் தேர்வு குறித்து இன்று விவாதம் நடைபெறும் என உறுப்பினர்கள் எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் கட்சியினர் ஒரு நிபந்தனையை விதித்துள்ளதாக தெரிவித்தார்.
விவாதம் எவ்வளவு நேரம் நடைபெற வேண்டும் என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம் என்றும், நிபந்தனைகளை விதிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார்.
விவாதத்தைத் தடுத்து நிறுத்துவதே காங்கிரசின் நோக்கமாக இருப்பதால், நிபந்தனைகளை விதிக்கும் செயல் சரியானது அல்ல என குற்றம்சாட்டிய அவர்,
அரசியல் கலப்பின்றி இரு அவைகளிலும் நீட் தேர்வு குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொண்டார்.
மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான தண்டனையை வழங்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக கூறிய கிரண் ரிஜிஜு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எந்த நிபந்தனையும் விதிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
















