தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் நிறைமாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தாக்கிய திமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டுமென அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்மாப்பேட்டை அருகே உள்ள உக்கடை வாக்குச்சாவடிக்கு நாதக வேட்பாளர் அனீஸ் ஃபாத்திமா வந்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த கட்சித் துண்டை காவல்துறையினர் அகற்றச் சொல்லியுள்ளனர்.
இதனையடுத்து அவர் துண்டை காரிலேயே வைத்துவிட்டு உள்ளே சென்றார். ஆனால், அதே வாக்குச்சாவடியில் இருந்த திமுக நிர்வாகிகள் தங்கள் கட்சியின் சின்னம் பொறித்த அடையாள அட்டையை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனைச் சுட்டிக்காட்டி நாதகவினர் காவல்துறையிடம் கேள்வி எழுப்பியபோது, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது 8 மாத கர்ப்பிணியான நாதக வேட்பாளர் அனீஸ் ஃபாத்திமாவை திமுகவினர் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
















