அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் திறமை தாய்நாட்டிற்கு தேவைப்படுவதால், அவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என ஸோகோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், 37 ஆண்டுகளுக்கு முன்பு தான் செய்தது போலவே நீங்களும் பணமின்றி, இந்தியாவின் சிறந்த கல்வி மற்றும் கலாச்சார பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு சென்று இலக்கையும் அடைந்துள்ளீர்கள் எனவும்,
அமெரிக்கா நமக்கு செய்திருக்கிற இந்த நல்ல விஷயத்துக்காக நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த சிலர், இந்தியர்கள் அமெரிக்கர்களின் வேலைகளை பறித்துக் கொள்கிறார்கள் என்றும் நியாயமற்ற முறையில் நமது வெற்றி சம்பாதிக்கப்பட்டிருக்கிறது எனவும் நினைக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
இந்திய நாட்டின் அதிர்ஷ்டத்தால் தான் உலகெங்கிலும் இந்தியர்களுக்கு மரியாதை கிடைப்பதாகவும்,இந்தியா ஏழை நாடாகவே இருக்கும்பட்சத்தில் சிலர் பரிதாபத்துடனும், சிலர் இகழ்ச்சியுடனும் அறநெறி போதனைகளை வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் தொழில்நுட்ப திறமையை பெறுவதற்கான வழியை இந்தியா உருவாக்குவதாகவும், ஆனால் அந்த திறமையில் பெரும்பகுதியை நாம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து விட்டோம் எனவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் அந்த திறமையை நாம் வளர்க்க வேண்டும் எனவும், இதை பற்றி சிந்திப்பது பலருக்கு கடினமாக இருந்தாலும், உங்களது திறமை நமது நாட்டிற்கு தேவை எனவும் தெரிவித்துள்ளார்.
















