காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…
காவிரியில் உரிய நீரை திறந்து விட அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்துவதில்லை எனக் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து ஏன் தண்ணீர் திறக்கவில்லை? என கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர், காவிரி மேலாண்மை ஆணைத்தின் உத்தரவுகள் அனைத்தும் பின்பற்றப்பட்டதாகவும்,விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி என்ற அளவைவிட அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், எப்படி நீர் வரவில்லை என குற்றம்சாட்டுகிறீர்கள்? என தமிழக அரசு தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தமிழக அரசு, கடவுள் அருளால் மழை அதிகமாக பெய்த நிலையில், உபரி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாகவும் இதற்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாக செயல்படுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டியது.
இதனை கேட்ட நீதிபதிகள், அதிக மழை பொழிவால் வந்த நீரை அணைகளில் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால்தான் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதா? என கர்நாடகாவுக்கு கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து தமிழகத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு என்ற உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், ஒரு வாரம் திறக்கப்படும் நீரின் அளவு குறித்த முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர்…
















