பாஜகவில் புதிய தேசிய நிர்வாகிகளை நியமித்து தேசிய தலைவர் நிதின் நபின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
அதன்படி, பாஜக தேசிய துணைத் தலைவர்களாக வசுந்தரா ராஜே சிந்தியா, தீரத்சிங் ராவத், ராம் மாதவ், பைஜயந்த் ஜெய் பாண்டா, புரந்தேஸ்வரி உள்ளிட்ட 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளராக பி.எல்.சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய அமைப்பு இணை பொதுச்செயலாளர்களாக ஷிவ்பிரகாஷ், சவுதன்சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக, தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய பொதுச்செயலாளர்களாக வினோத் தாவ்தே, சுனில் பன்சால், ஸ்மிருதி இரானி உட்பட 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய செயலாளர்களாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.வெங்கடேசன், கேரளாவை சேர்ந்த சுரேந்திரன், அனில் அந்தோணி உட்பட 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக தேசிய பொருளாளராக பியூஷ் கோயலும், இணைப் பொருளாளராக ராஜேஷ் மங்கலும் நியமிக்கப்படுவதாக, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ளார்.
இதேபோல், அனைத்து அணி ஒருங்கிணைப்பாளராக விஷ்ணு தத் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து அணி இணை ஒருங்கிணைப்பாளர்களாக ரிதுராஜ் சின்ஹா, விஷ்ணு வர்தன் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவராக சத்தீஸ்கரை சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரியும்,
பாஜக இளைஞரணி தலைவராக குஜராத்தை சேர்ந்த ஹேமங் ஜோஷியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய குழுவில் அமைப்பு ரீதியான அனுபவம், ஆற்றல், அடிமட்ட தொண்டர்களுடனான தொடர்பு ஒருங்கிணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை மேலும் வலுப்படுத்துவதிலும், மக்கள் சேவையிலும் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என்று நம்புவதாகவும் பிரதமர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
















