சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக வழக்கறிஞரும், பாஜக நிர்வாகியுமான பால் கனகராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய வழக்கறிஞர் சங்கமான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பலர் போட்டியிட்டனர். தொடர்ந்து பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வழக்கறிஞரும், பாஜக மாநில துணை தலைவருமான பால் கனகராஜ், ஆயிரத்து 892 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அத்துடன் துணை தலைவராக சசிகுமார், செயலாளராக அறிவழகன், பொருளாளராக ராஜேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பால் கனகராஜ், தன்னை நம்பி வாக்களித்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், சங்கத்தின் நலனுக்காகவும், வழக்கறிஞர்களின் உரிமைக்காகவும் உறுதியுடன் பணியாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.
















