சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலைக்கு, சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சித்ரா பௌர்ணமி நேற்றிரவு 9.52 மணிக்கு தொடங்கி இன்றிரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது.
அதனையொட்டி இரு நாட்களும் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் வருவார்கள் என்பதால், திருவண்ணாமலைக்கு செல்ல மாநிலம் முழுவதும் இருந்து, 5 ஆயிரத்து 669 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் பாதுகாப்பிற்காகவும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு குவிந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையால் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலையின் சுற்றுவட்ட பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
















