பெரும்பான்மையோடு வந்தால் நாளையே பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயாராக இருப்பதாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த ஆளுநர், தமிழகத்தில் ஆட்சியமைக்க தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை அவசியம் என்றும்,
அதன் பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆட்சியமைக்க உரிமை கோரி வருவோரிடம் தான் கேட்பது ஒன்றுதான், அது ஆட்சியமைக்க தேவையான உறுப்பினர்கள் உள்ளனரா என்பதுதான் என்றும் தெரிவித்தார்.
அதிமுக – திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வந்து ஆட்சியமைக்க உரிமை கோரினால் அனுமதி அளிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர்,அப்படி வரும்போது அவர்களுக்கான எண்ணிக்கை உள்ளதா என்பதை பரிசீலனை செய்து முடிவு எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
இன்று எண்ணிக்கையை கொண்டுவந்தால் நாளையே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறேன் என்றும் ஆளுநர் உறுதிபடக் கூறினார்.மெஜாரிட்டி இல்லாதது விஜய்க்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்குமான பிரச்சினை என்றும், 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மைனாரிட்டி அரசு ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது எனக் கூறிய ஆளுநர், 118 எம்எல்ஏக்களை கண்முன் நிறுத்துங்கள் என்று நான் கூறவில்லை எனவும்
விஜய் பதவியேற்பை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்? எனவும் கேள்வி எழுப்பினார்.
விஜய் மெஜாரிட்டி எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்க தயார் எனவும் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிப்பேன் எனக் கூறியுள்ள ஆளுநர்,எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் உத்தரவு தற்போதைய சூழலுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.
















