திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் நிலையில், கூட்டணி தலைவரான ஸ்டாலின் எடுக்கும் முடிவை எந்தவித மறுப்புமின்றி ஆதரிப்போம் என ஐயூஎம்எல் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற போதிலும், பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைக்க முடியாமல் தவெக திணறி வருகிறது. இதற்கிடையே ஆட்சியமைக்க ஆதரவு கோரி திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை நாடிய தவெக-விற்கு, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கடிதங்களை வழங்கியுள்ளன.
இதேபோல, விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளிடமும் தவெக ஆதரவு கோரியிருந்த நிலையில், இரு கட்சிகளின் தலைவர்களான திருமாவளவன் மற்றும் காதர் மொய்தீன் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், திமுக கூட்டணியிலேயே ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருவதாகவும், கூட்டணியின் தலைவரான ஸ்டாலின் எடுக்கும் எந்த முடிவுக்கும் மறுப்பின்றி கட்டுப்படுவோம் என்றும் கூறினார்.
மற்றொருபுறம் விசிக-வும் இதுவரை தவெக-விற்கு ஆதரவு கடிதம் வழங்காத நிலையில், ஸ்டாலின் – திருமாவளவன் இடையேயான சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தவெக-விற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக விசிக-வின் உயர்நிலை கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்த நிலையில், திருமாவளவன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், விசிக தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பான அதிகாரபூர்வ முடிவை திருமாவளவன் இன்று தெரிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















