திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வருகிறது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தேர்தல் முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதால், சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
















