மின்மாற்றி ஊழல் தொடர்பாக திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தவெக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமான TANGEDCO, 397 கோடி ரூபாய் மதிப்பிலான மின்மாற்றி (Transformer) ஊழல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் CBI-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் முந்தைய திமுக அரசு ஏன் மேல்முறையீடு செய்துள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த மேல்முறையீடு முந்தைய அரசால் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய TVK அரசுக்கு இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
CBI விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கில், மாநில அரசின் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீடுகளை உடனடியாகத் தலையிட்டுத் திரும்பப் பெறுமாறு புதிய TVK அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தவெகஅரசு தனது ஊழல் ஒழிப்பு வாக்குறுதியில் உண்மையான அர்ப்பணிப்புடன் இருக்குமேயானால், முந்தைய திமுக அரசால் திரும்பப் பெறப்பட்ட, தமிழ்நாட்டில் CBI விசாரணைகளை மேற்கொள்வதற்கான ‘பொது ஒப்புதலை’ (General Consent) அது மீண்டும் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய வழக்குகள் உட்பட, DVAC-யால் முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள பல ஊழல் வழக்குகள் இருப்பதும் கவனிக்கத்தக்க முக்கிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















