ஹரியானா மாநில உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் அம்பாலா, பஞ்ச்குலா, சோனிபட் ஆகிய மாநகராட்சிகளுக்கும், ரேவாரி நகராட்சிக்கும், தருஹேரா, சாம்ப்லா, உக்லானா ஆகிய நகராட்சி குழுக்களுக்கும் கடந்த 10ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி, 3 மாநகராட்சிகளையும் ரேவாரி நகராட்சியையும் ஆளும் பாஜக கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவின் கோட்டையாக கருதப்படும் சாம்ப்லா நகராட்சி குழுவையும் தருஹேரா நகராட்சி குழுவையும் பாஜக தன்வசப்படுத்தியுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஹரியானா தேர்தலில் பாஜக பெற்ற மகத்தான வெற்றிக்காக மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாஜக அரசு பின்பற்றி வரும் வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக் கொள்கைகள் மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என்பதை இந்த வெற்றி மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
மாநிலத்தின் இரட்டை எஞ்சின் அரசின் மீது ஹரியானா மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் சின்னமாக இந்த வெற்றி விளங்குகிறது எனவும் இதற்கு முக்கிய பங்காற்றிய கட்சித் தொண்டர்களை மனதார வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
















