மேற்காசிய போர் விளைவாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போர் நெருக்கடி காரணமாக உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், இந்தியாவில் மட்டும் உயர்த்தப்படாமல் இருந்தது.
பொதுமக்கள் மீது சுமையை ஏற்ற விரும்பாத மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை குறைத்தது. எனினும், எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் 1000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வந்தன. இந்த நிலையில், இழப்பை சரிகட்டும் விதமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அதன்படி நாடு முழுவதும் பெட்ரோல் விலை மூன்று ரூபாய் 14 காசுகளும், டீசல் விலை மூன்று ரூபாய் 11 காசுகளும் உயர்த்தப்பட்டன. இந்த விலை உயர்வுக்கு உடனடியாக அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய் 98 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய் 47 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
















