நீட் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அடுத்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் நீட் தேர்வை நடத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது,
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூன் 14-ம் தேதி வழங்கப்படும் என்றும், மறுதேர்வுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு ரத்தான நிலையில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணமும் தேர்வர்களுக்கு திருப்பி வழங்கப்படும் எனக் கூறிய அவர்,நீட் தேர்வு வழக்கமான முறையில் நடைபெறும் எனவும் OMR படிவத்தை பூர்த்தி செய்ய கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும் எனவும் கூறினார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என்றும்,அடுத்த கல்வியாண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
நீட் தேர்வில் இனி முறைகேடுகள் எதுவும் நடைபெறாது எனவும். ஏற்கெனவே நீட் தேர்வு விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், தவறான வழியில் தேர்ச்சி பெற முயலும் நபர்களால் தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்காது என்றும், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
















