இந்தியா – நெதர்லாந்து நாடுகளுக்கு இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெத்தாகி உள்ளது. பாதுகாப்பு, முதலீடு, கனிமவளம் போன்ற துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருநாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்….
இரண்டு நாள் பயணமாக நெதர்லாந்தின் ஹேக் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ராப் ஜெட்டனுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதன் பயனாக இருநாடுகளுக்கும் இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் டாடா நிறுவனமும், நெதர்லாந்தின் ஏ.எஸ்.எம்.எல் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், குஜராத்தின் தோலேராவில் அமையவிருக்கும் அதிநவீன செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு நெதர்லாந்து தனது தொழில்நுட்ப ஆதரவை வழங்கவுள்ளது.
இது தவிர்த்து மேலும் பல முக்கிய ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளது. அதன்படி 2030-ம் ஆண்டு வரை வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி, முதலீடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரிய வகை தாதுக்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும், இந்தியாவின் சுரங்கம் மற்றும் தாதுப்பதப்படுத்தும் திறனை மேம்படுத்தவும் நெதர்லாந்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நெதர்லாந்தில் படிக்கவும், வேலை செய்யவும் ஏதுவாக விசா விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது.
மேற்கு திரிபுராவில் மலரியல் மேம்பாட்டிற்கான ‘சிறப்பு மையம்’ அமைக்கவும், பெங்களூருவில் நவீன பால்வளப் பயிற்சி மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் நெதர்லாந்து உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் எதிர்கால மருத்துவ சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு ஆராய்ச்சிக்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்த ஒப்பந்தமும் கையெழுதாகியுள்ளது.
எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், ஐரோப்பிய நாடுகளுக்கு பசுமை ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் இந்தியாவுக்கு உருவாகியுள்ளது.
பிரதமரின் நெதர்லாந்து பயணம் இரு நாடுகளின் பொருளாதார விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதுடன், இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
















