சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை இளம்பெண் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து வடபழனியில் உள்ள மாலில் வேலை செய்து வந்தார். அப்போது சூளைமேடு பகுதியை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவருடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி இந்து மதத்தை சேர்ந்த அந்த பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாற்றியதாகவும் அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இளம்பெண்ணை ஏமாற்றிய சையது இப்ராஹிம், வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முயன்றார். ராயபுரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண், தனது ஆதரவாளர்களுடன் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி, சையது இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். அவரை தரதர வென்று இழுத்துச் சென்றதுடன், சமூக ஆர்வலர் வளர்மதியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது…
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக வந்த அப்துல் கரீம் என்பவரின் முகத்தில் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி கடுமையாக தாக்கினார். இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக காவல்நிலையம் சென்ற ராயபுரம் தவெக எம்எல்ஏ விஜய் தாமு, பொதுமக்களை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தது என காவல் ஆய்வாளரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பணம் வாங்கிக் கொண்டு ஒருதலைபட்சமாக செயல்படாதீர்கள் என எம்எல்ஏ அறிவுறுத்திய நிலையில் அவரிடமே காவல் ஆய்வாளர் மிரட்டும் தொனியில் பேசினார்.. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















