இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களை அமைப்பதற்காக ஸ்ரீநகரில் ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதி, முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். யார் அந்த பயங்கரவாதி ? ஏன் Hair Transplant செய்தார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்குத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவளித்து வருகிறது. ஆப்ரேஷன் சிந்தூரில் தோல்வி அடைந்த பின்னும் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த பயங்கரவாதிகளை சட்டவிரோதமாக ஊடுருவ வைக்கிறது.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, லாகூரைச் சேர்ந்த ‘சைனீஸ்’ என்ற முகமது உஸ்மான் ஜட் என்ற பயங்கரவாதிக்குப் பயிற்சி அளித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. இந்தியா முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும், ஸ்லீப்பர் செல் நெட்வொர்க்கை உருவாக்கவும் அவருக்கு திட்டம் வகுத்து கொடுக்கப் பட்டிருந்தது.
சட்ட விரோதமாக காஷ்மீருக்குள் நுழைந்த உஸ்மான் ஜட், அம்மாநிலத்தின் அமைதியான இயற்கை அழகு மற்றும் இந்திய மக்களின் இயல்பான வாழ்க்கையைக் கண்டு ஆச்சரியப்பட்டான்.
தனது திட்டத்தின் படி இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களை உருவாக்கிய உஸ்மான் ஜட், பல ஆண்டுகளாகவே கடுமையான முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனையால் பாதிக்கப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இஸ்லாமிய பயங்கரவாத பயிற்சி முகாம்களில் ஆழமாகப் போதிக்கப்பட்ட இந்து-இந்தியா விரோத கொள்கைப் பிடிப்பு உஸ்மான் ஜட்டிடம் பலவீனமடையத் தொடங்கியதால் இறுதியில், தனக்கு ஒதுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல் திட்டங்களை நிறைவேற்றுவதை விட, தனது வழுக்கைத் தலைக்கு சிகிச்சை எடுக்கவே அதிக அக்கறை காட்டியுள்ளார்.
இதையடுத்து தனது பயங்கரவாத திட்டத்தை நிறுத்திவிட்டு, ஸ்ரீநகரில் உள்ள ஒரு கிளினிக்கில் முடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில், ஸ்ரீநகர் காவல்துறையினரால் ஜட் கைது செய்யப்பட்டுள்ளார். இது போன்ற சம்பவங்களின் பின்னணி குறித்தும் NIA தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தங்களை அடையாளம் காண முடியாதவாறு மாற்றிக்கொள்வதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் Hair Transplant உள்ளிட்ட Cosmetic மற்றும் Plastic சர்ஜரி போன்ற அழகுக்கான அறுவை சிகிச்சைகளை பயன்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பிரிவை அமைத்தவரும் கடந்த மார்ச் மாதத்தில் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டவருமான ஷபீர் அகமது லோன், குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பல் மாற்று சிகிச்சையும் செய்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது.
காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத்தைத் தூண்டும் வகையில் போஸ்டர் ஒட்டியதாகக் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்சேர்த்த குழுவைச் சேர்ந்தவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையின் தொடர்ச்சியாக லோன் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
விசித்திரமாகவோ தற்செயலாகவோ தோன்றினாலும்,பயங்கரவாதிகளுக்கு அழகு சிகிச்சைகளில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு பிடிபடாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது தோற்றத்தை மாற்றிய சாஜித் மிர் என்பவரிடமிருந்து இத்தகைய உத்தியை பயங்கரவாதிகள் கடைப்பிடிக்க தொடங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பயங்கரவாத தோற்றத்தை மாற்றுவதற்கும், புதிய அடையாளங்களை ஏற்றுக்கொள்வதற்கும், சர்வதேச சட்ட அமலாக்க அமைப்புகளிடமிருந்து தப்பிப்பதற்கும் அழகு சிகிச்சை என்பது திட்டமிட்ட செயலாகவே இருக்கலாம் என்றும் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சர்வதேச போக்குவரத்து மையங்களில் பயன்படுத்தப்படும் AI மற்றும் பயோமெட்ரிக் முக அங்கீகார மென்பொருளையே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் பெரிதும் சார்ந்துள்ளனர்.
அதாவது வெறும் புகைப்படத்தை மட்டும் பார்க்காமல் ஒரு நபரின் கண்கள், மூக்கு, தாடை புருவம் மற்றும் நெற்றியின் எல்லை ஆகியவற்றுக்கு இடையேயான துல்லியமான, நிலையான அளவுகளைக் கண்காணித்து வரைபடமாக்குகின்றன.
எனவே தேடப்படும் குற்றவாளிகளும், பிடிபடாமல் இருக்க எச்சரிக்கையாக இருக்கும் பயங்கரவாதிகளும் முகத்தில் தங்களின் முக்கிய அடையாளப் புள்ளிகளை மாற்றியமைப்பது, அந்தப் பயங்கரவாதிகள் உயிர் பிழைப்பதற்கான ஒரு முக்கிய விஷயமாக உள்ளது.
எனவே விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள NIA யின் குற்றப் பத்திரிகை ஆவணங்களுடன் பயங்கரவாதிகளின் அழகு சிகிச்சை மோகம் பற்றியும் ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
















