சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடை காரணமாக நோயாளிகள் அவதியடைந்தனர்.
பெருங்குடியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அவசர காலங்களில் செயல்பட வேண்டிய ஜெனரேட்டர் வசதிகளும் முறையாக இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, வென்டிலேட்டர் உள்ளிட்ட உயிர் காக்கும் அதிநவீன மருத்துவக் கருவிகள் அனைத்தும் அடுத்தடுத்துச் செயலிழந்துள்ளன.
குறிப்பாக, ஆக்சிஜன் ஆதரவில் இருந்த பல நோயாளிகளின் நிலைமை மிக மோசமடைந்தது. மின்தடையால் ஆக்சிஜன் வழங்கும் இயந்திரங்கள் நின்றதால், ICU வார்டில் இருந்த நோயாளி ஒருவருக்கு மருத்துவர்கள் தற்காலிகமாகக் கைகளால் அழுத்திப் பயன்படுத்தக்கூடிய ‘அம்பு பலூன்’ கருவி மூலம் மூச்சு வழங்கியுள்ளனர்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
















